Saturday 26 February 2011

பண்பாடு


காலைக்கருக்கல் மெல்ல விலக
மல்லிகை வாசம் மனத்தை நிறைத்தது.
காக்கைகள் கரையல் காதைக் கிழிக்க
மாட்டு வண்டில்கள் வீதியில் போயின.
கோவில் மணிகள் தாங்களும் ஒலித்துத்
தங்கள் இருப்பையும் காட்டிக் கொண்டன.
பயணக் களைப்புக் கொஞ்சம் குறையத்
தம்பையர் மனமும் ஊருக்கு வந்தது.
இருபது வருஷம் எப்படிப் போட்டுது.
நம்ப முடியாமல் தம்பையர் திகைத்தார்.
ஊரைப்பார்க்க மனசு துடித்தது.
கடலைப் பார்க்கத் தம்பையர் நடந்தார்.

போயிலைத் தோட்டங்கள் தொலைந்து இருந்தன.
புகைக்குடிசைகள் பாதியாய் நின்றன .
பழைய துலாக்கள் பாறிப் போயின.
குழம்பிய படியே தம்பையர் நடந்தார்.
ஆமிக்காரர்கள் மூட்டிய நெருப்பில்
முள்ளிப் பத்தைகள் முடிவைக்கண்டன.
முள்ளிப் பத்தையில் சுட்ட நண்டுகள்
நினைவில் மட்டும் வந்து போயின.
கோவில் மட்டும் வெள்ளையும் சிவப்புமாய்
புதிசு போல நிமிர்ந்து நின்றது.
தென்னை மரங்கள் உயிரை இழந்து
தென்னங்கிளிகளின் வீடுகள் ஆகின.

கடலுக்குள் யாரோ மீன் பிடித்தார்கள்.
வீசிய வலையில் தூசிகள் வந்தன
தடியில் தொங்கிய ஓலையும் பாயும்
காற்றில் அசைந்து வெறுமையைக் காட்டின.
சலித்த உருவம் கரைக்கு வந்தது
'தம்பியை எங்கோ கண்ட மாதிரி'
சுயமாய் வந்தது சுக விசாரணை
'தம்பையன், என்னை மறந்து போட்டியே'
சின்னத்துரையன் சந்தோசப் பட்டான்
'கனகாலம் தம்பி, வீட்டுக்கு வாவன்'
கனிவாய் இனித்தது, அவனது அழைப்பு.

வீட்டில் எந்த மாற்றமும் இல்லை.
அன்றைக்குப் போலவே இன்றைக்கும் இருந்தது.
'தம்பி, என்ன தண்ணி சுடுகுதோ?'
அவனது கேள்வியில் அக்கறை தெரிந்தது.
அலட்டி முடிந்து கிளம்பும் நேரம்
அவனது கையில் பாரைக்கருவாடு
'வேண்டாம் சின்னத்துரை'
'தம்பி மறுக்காதை"
பொல்லாத கோவம் அவனுக்கு வருமாம்.
காசைக் கொடுத்தேன். வாங்க மறுத்தான்
அவனது பார்வையில் அக்கினி தெரிந்தது.

திரும்பி நடந்தேன்
'தம்பி, கருவாடு எங்காலை?'
ஆமிக்காரன் படுத்திற பாட்டிலை
கடலுக்கிள்ளை இறங்கேலாதாம்.
சின்னததுரயன் வீட்டிலை கேட்டன்
பட்டினி என்று பல்லவி பாடுறான்.
எந்தன் கண்களில் கண்ணீர் துளிர்த்தது
பாரியின் தேர்க்கதை நினைவுக்கு வந்தது
ஆயிரம் தேர்கள் அவனிடம் இருந்தது.
ஒன்றைக்கொடுத்தால் உயிரா போய்விடும்?
என்னிடம் நானே கேட்கின்ற கேள்வி.
எதையோ ஒன்றை இழந்து விட்டேனா?