Sunday 24 April 2011

இந்திய தேசமே! ஒதுங்கி விடு!!
















விந்திய மலைத்தொடரில்
அந்த அகத்தியமுனிவன்                   
அடிபதித்த நாள் முதலாய்,
இந்திய தேசம்
எங்கள் தேசத்தைத்
தங்கள் தேசத்துடன்இணைத்துக் கொண்டது!

சோழ வள நாட்டின்
சோறுடைத்த வயல்களும்
சேரநாட்டு யானைகளின்
செழிப்பான தந்தங்களும்,
பாண்டிய நாட்டின்
பசுமை மிக்க இலக்கியமும்,
இந்திய தேசத்தின்
சொத்துக்களாகின.

அரை குறையாய் வளர்ந்த
ஆரியமொழி,
எங்கள் தமிழிடம்
கடன் வாங்கித் தன்னை
வளர்த்துக் கொள்ள,
விலை போகாத வேதங்களும்
வேள்விகளும்,சாதிகளும்
எங்கள் சொந்தங்களாகின.

புறமுதுகு காட்டாத
புறநானுற்றுத் தமிழன்
இராமாயணத்தின்
குரங்காக மாற,
கடாரம் வரை
கப்பலோட்டியவன்
பிடாரிக்குக் கோவில் கட்டிக்
கும்பிடுகிறான்.

இந்தியாவின் கரங்கள்
இலங்கை வரை நீண்டு .
நந்திக் கடல் வரைக்கும்
எங்களைத் துரத்தின.
எங்கள் இரத்தத்தின் ரத்தங்களே
இரத்த வெறி கொண்டு
இராமாயணத்தின்
சுக்கிரீவன்களாகின.

இந்திய தேசமே!
இறுதிச் சந்தர்ப்பம்.
துப்பவும் முடியாமல்
விழுங்கவும் முடியாமல்
தொண்டைக் குழியில் நீ!.
ஆணையிட எங்களிடம்
ஆயுதங்கள் இல்லை.

எங்கள் தலை விதியை
எங்களிடம் விட்டு விடு!.
உதவி வேண்டாம்
ஒரு பக்கம் ஒதுங்கிவிடு!.
உனது மௌனமே
எங்கள் தேசத்தின்
விடி விளக்காய் இருக்கட்டும்!

Saturday 2 April 2011

'தர்மச்சக்கரம்'


















கலிங்கம் வீழ்ந்தது!
குருதி கொப்பழித்த 'தாயா'
நதிக்கரையின் ஓரங்களில்,
கரையொதுங்கிய பிணங்களின்
இரத்த வாடை கலந்த காற்று
வெற்றிச்செய்தியை,
நெற்றியில் சுமந்து வீசியது,
அன்னப் பறவைகள் நடை பயின்ற
ஆற்றங்கரையில்,
ஆந்தைகளும் கழுகுகளும்
குந்தியிருந்தன.
கலிங்கம் வீழ்ந்தது!.
வீதியெங்கும் வெற்றியின் பூரிப்பு.
வீழ்ந்து கிடக்கும் கலிங்கத்து
வீரர்களின் கோலத்தை,
தோல்வியில் துவளும் கலிங்கத்தின்
குங்குமம் இல்லாத முகத்தைப்
பார்க்கத் துடித்தது
அவன் வக்கரித்துப்போன மனம்.

கலிங்கம் வீழ்ந்தது!
காணுமிடமெல்லாம்,
மரணத்தின் விளம்பரங்கள்.
ஆண்கள், பெண்கள் குழந்தைகள்
ஆயிரமாயிரமாய் வீழ்ந்து கிடந்தன.
ஆயுதம் தாங்காத கைகள்!
கவசம் இல்லாத மேனிகள்!.
கந்தல் ஆடைகளே கவசங்களாக,
கலப்பைப் பிடிகளே ஆயுதங்களாக,
அசோகன் கலங்கினான் .
'அகண்ட' பாரதம்.
அவன் கண்ட கனவு!
நனவாகிய வேளை,
அவன் கண்கள் பனித்தன.

கலிங்கம் வீழ்ந்தது!
மன்னனின் தலைக்குள் ஒரு குரல்!
'மன்னா பற்றைத் துறந்து விடு'.
மன்னனின் நாடி நரம்பெல்லாம்
திரும்பத் திரும்ப,
மந்திரமாக ஒலித்தது அது.
'மன்னா பற்றைத் துறந்து விடு'
சடப்பொருளிலும் ' தர்மா' வைத்
தேடியவனின் குரல்கள்..

காலம் திரும்பியது.,
மீண்டும் ஒரு கலிங்கம்!
'சர்வதேச சமுகம்'
முன்னுரையை எழுதிவைக்க
'முள்ளிவாய்க்கால்'
முடிவுரையை எழுதியது.
முன்னின்று நடத்தியது,
‘'அகண்ட' பாரதம்!

'அவாள்கள்' ஓதிய 'வேதத்தில்'
தர்மச்சக்கரத்தின் அச்சாணிகள்
மீண்டும் கழன்றன.
அழகிய தர்மச்சக்கரம்,
'அகண்ட பாரதக்' கொடியின்
அலங்கோலத்தைப்
பிரதி பலித்தது.

கலிங்கத்துப் போரில்,
பேய்கள் கூழ் காய்ச்சப்
பற்கள் கிடைத்தன.
எங்கள் கலிங்கத்தில் ..
எரிந்த 'இரசாயன' நெருப்பில்
எங்கள் பற்கள் மட்டுமல்ல
எலும்புகள் கூட,
நீறாகிப் போயின.
பதுங்கு குழிகளே எங்கள்
புதை குழிகள் ஆக,
எங்கள் வேலிகளே
எங்களை மேய்ந்தன.

புத்தனின் பல் மட்டும்
பூட்டிய பெட்டியினுள்
பத்திரமாய் இருந்தது.
‘தலதா’ மாளிகையின்
வாசற்படிகளில்.
காவலுக்கு நின்றன
இயந்திரத் துப்பாக்கிகள்!
ரத்தக் காட்டேரிகள் ஆளும்
'இலங்காபுரி'யின்
தேசீய இலச்சனையிலும்
திமிரோடு வீற்றிருந்தது
அந்தத் 'தர்மச்சக்கரம்'