Friday 11 May 2012

நெடுந்தீவின் சிதறல்கள்



கோலம் கலைந்து கிடந்தது,
குறி காட்டுவான் துறைமுகம்!

கடற்கரை வாசம் தொலைந்து போய்,
கடற்படையும், தரைப்படையும்,
காவல் காத்தன!
காவியுடன் இன்னொரு புதிய படை!
புத்தனுக்குக் கூடப் புரிந்திருந்தது,
அந்தப் புனித பூமியின் மகிமை!

வரிசைப் பனை மரங்கள் தான்,
வழக்கம் போல வழியனுப்பின!

ஏழாத்துப் பிரிவு எறியும் அலைகள்,
இன்னும் வீரியம் இழந்து விடவில்லை!

ஆயிரம் பயணங்களில் அனுபவங்களோடு,
ஆடி அசைந்து நகர்ந்தது படகு!
அந்தக் 'குமுதினியின்' நினைவு,
மீண்டுமொரு முறை வந்து போனது!

தூரத்தில் கருமைக் கோடாகித்,
தெரிந்தது வருங்காலச் சிங்கப்பூர்!
குறுக்கும் நெடுக்கும் பறந்து,
முத்துக் குளித்தன, கடற் புறாக்கள்!

காகம் கரைவது கேட்டுக்,
காத்திருந்து விருந்தோம்பிய காலம்,
கனவாகிப் போனது போலும்!
வரிசை பிசகாத வேலிப் பயிர்கள்,
வனாந்தர வெளியில் சிதறிப் போயின!

வடமராட்சி மீனவர் தேடி வருகின்ற,
வாடையில் விளைந்த சூடைகளும்,
படையோடு கரையிறங்கும் பாரைகளும்,
பழைய நினைவுகளாய் வந்து போக,
பால் சுறாக்களின் துள்ளல் மட்டும்,
பசுமையாய் நினைவிருந்தது!

தரவை நிலங்களில் வளரும்,
கருக்குவாச்சி மரங்களில் நிழலாறிப்,
பொறுக்கிய எருக்கும்பல்கள் கூடக்,
கனவாகிப் போய் விட்டது!
கறவை மாடுகள் மேயும் தரவைகளில்,
நெருஞ்சி மரங்கள் படர்ந்து,
நெஞ்சில் கோடு கீறின!

கழிகளில் நிறைந்த மீன்கள் தேடி,
புலம் பெயரும் பறவைகள் நாடி வரும்!
கூழக்கடாக்களின் பாரத்தில்,
கங்குமட்டைகள் மெதுவாக முனகும்!
எருக்கிழறிப் பறவைகளின்
ஒருமித்த அசைவில்,
ஏரிக்கரைகளும் கருநிறம் கொள்ளும்!

வளம் தவழும் உன் ஏரிக்கரைகளை,
வெறும் வேலிகள் காவல் காக்கின்றன!
தலையில் சுமந்த தண்ணீர்க் குடமே!
நிலத்தில் உருளும் வெறும் குடமானதேன்?








ஒன்றாகக் கரம் கூட்டுவோம்!














கலிகாலம் பிறக்கக்,
காத்திருக்கும் கபோதிகள்!
கண்ணீர்க் குமுறலுடன் ,
கண்ணில் விரிந்தது அவலம்!
காற்றையும் நஞ்சாக்கிய,
கனரக ஆயுதங்களின் குமுறல்!
கார்வண்ணன் தேரோட்டாத,
குருசேத்திரப் போர்க்களம்!
கருகி எரிந்த பிஞ்சுகள் நடுவில்,
குருதியில் குளித்தன சருகுகள்!
கூட்டாக நடத்திய கொலைக்களம்..
கூட்டங்கள் நடத்தம். கொலைகாரர்!
கொஞ்சிக் குலாவுகின்றன,
காந்தீயக் கோழைகள் !

கலிங்கத்து மன்னனின்,
கால் பட்ட தூசியும்,
காந்தீய தேசத்தின்.,,
கதை கேட்டு விலகியோடும்!
கலிங்கத்துப் பரணியில்,
கூழுண்ட பேய்களும்,
கொடுப்புக்குள் சிரிப்புதிர்க்கும்!
போதிமரம் காணும் புதிய குருத்துக்கள்,
பாவத்தின் சின்னமாகும்!
பூவேந்தி நீ செல்லும்,
புத்தனின் தூபிகள்,
போர்குற்றம் ஏந்தி நிற்கும்!

துருபதா தேவியின்,
துகில் களைந்தவன் கூடத்.
தூயவனாகி விட்டான்!
உயுருள்ள பெண்ணொன்றின்,
உடைகள் கலைகையில்,
ஓடிவந்தான், கண்ணன்!
ஓவென்ற அலறலில்,
நாங்கள் அழுகையில்.
ஓடி ஒளித்தான்,அவன்!
கருகிய பயிர்களும்,
கண் விழிக்கும் காலம்,
கண் முன்னே விரிகிறது!
உரிமையின் தேவையின்,
உண்மையின் உணர்ச்சியில்.
ஒன்றாகக் கரம் கூட்டுவோம்!