Saturday 11 August 2012

முருகனும், சாதகமும்!



கந்தையர், வழக்கத்தை விடக் கொஞ்சம் 'பிசியாக' இருந்தார்.
'வதனா விலாசின்' மேலே கட்டப்பட்டிருந்த, ஒரு விதமான மாடியிலிருந்து, தற்காலிக படிகளைத் தூக்கிவைத்து, அதன் வழியே ஒரு விதமான,தனக்கேயுரித்தான லாவகத்துடன் கீழே இறங்கியவர், படிகளை எடுத்துச் மறைவான சுவரொன்றில், சாத்தியதும், மேலேயொரு, மாடி இருப்பதற்கான, எந்த வித அடையாளமும், அங்கு காணப் படவில்லை!
மள மளவென்று, காலைக்கடன்களை முடித்தவர், மீன்கடைக்குப் போன பெடியன், வந்திட்டானா என்று கடைக்கண்ணால் பார்த்து உறுதிப் படுத்திய பின்பு, முன்னாலிருந்த கடைக்குப் போய், ஒரு மல்லிகைப் பூமாலையை, வாங்கிக் கொண்டு வந்து, ஒரேயடியாகப், புத்தர், பிள்ளையார், முருகன்,லட்சுமி, அரபிக்கில் எழுதப் பட்ட படம், எல்லாத்தையும், கவர் பண்ணி, அதைப் போட்டார். பிறகு, ஊதுபத்தியைக் கொழுத்தி வைத்தவர், 'முருகா, முருகா, என்று, இரண்டு தரம் கூறியபடி, அன்றைய 'வீரகேசரிப் பேப்பரைத் திறக்கவும், தேத்தண்ணி குடிக்கிற ஆக்கள், வரத்துவங்கவும், சரியாக இருந்தது.
டேய், தம்பி, அந்தக் கயித்தைக் கொழுத்தி விடப்பு! என்று ஆரோ சிகரட் வாங்கி விட்டு, நெருப்புக் கேட்ட போது, சத்தம் போட்டார்!
ஆ, ஐயா வாங்கோ, அப்பு வாங்கோ! என்று தன்னையறியாமலே, வழக்கம் போல, வாய் திருவாய் மலர்ந்து கொண்டிருந்தது.
ம்ம்.... காலம் என்ன மாதிரி, ஓடிபோச்சுது, என நினைத்தவருக்குக், கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது.
இருக்காதா, பின்னே?
ஒரு 'பழையகாட்' சாரத்தோடையும், ஒரு 'மில்க் வைட்; சவர்காரக் கட்டியோடையும் தானே, ஊரை விட்டு வெளிக்கிட்டனான். இண்டைக்கு, ஒரு சாப்பாட்டுக் கடையும், நாலாம் குறுக்குத் தெருவில, ஒரு பலசரக்குக்  கடையும்   இருக்குதெண்டா, எல்லாம் அந்த முருகன் தந்தது தானே!
மீண்டுமொரு முறை, முருகனைப் பார்த்து,இரண்டு கன்னங்களிலும், போட்டுக் கொண்டவர், கடைக்குப் பின்னுக்குப் போய்,
டேய், தம்பி, அந்தப் பழைய இட்டலியளை, எறிஞ்சு போடாதை! உழுந்து வடைக்கிள்ள போட நல்லாயிருக்கும், என்று மெதுவாகக் கூறியபடி, சமையல் பகுதியை நோட்டமிட்டார்!
தம்பியள், அந்த வெந்தயக் குழம்பையும், ஊத்திப் போடாதேயுங்கோ!
வெந்தயக் குழம்பு, பழுதாகாது, பிள்ளையள். இன்டைக்கு, வைக்கிற குழம்போட, சேர்த்து விடுங்கோ, என்ற படி, எனக்கேல்லோ தெரியும், இந்தக் கடை துவங்கின காலத்துக் குழம்பு, இண்டைக்கும் இருக்கென  நினைத்தபடி,கடைக்கு முன்னால், ஓடி வந்தார்!
அப்போது, ஊரிலிருந்து, மனுசி எழுதின விசயம், நினைவுக்கு வர, கடைப் பெடியனைக் கூப்பிட்டுத்,
;தம்பி, ஒருக்கா வெள்ளைவத்தைக்கு ஓடிபோய்ப். புறோக்கர் ஆறுமுகத்தை, ஒருக்காக் கூட்டிக் கொண்டு வாப்பு, என்று கலைத்து விட்டவர், தொடர்ந்து, கல்லாப் பெட்டியில், இருந்த படியே, நினைவுகளில் மூழ்கிப் போனார்!
ஆனால், வாய் மட்டும், ஐயா வாங்கோ! அம்மா வாங்கோ! என்ற படி இருந்தது!
'இவள் வதனாக்கும், ஒரு கல்யாணத்தைப் பாத்துச் செய்து விட்டால், கடையைப் பெடியளிட்டைக் குடுத்துட்டு, இந்தியாவுக்குப் போய், என்ர 'முருகனைப்' பாத்திட்டு வந்திட்டனெண்டாக்  கண்ணை மூடினாலும், பறுவாயில்லை!
மத்தியானச் சாப்பாட்டுக்கு, ஆக்கள் வரத் துவங்கீற்றினம்!
அதாரது, பாங்கரையாவா! என்ன ஊருக்குப் போயிற்று வந்தனீங்க போல!
பதிலை, எதிர்பாராத நலம் விசாரிப்புகள்!
அதே நேரம், ஆரோ நண்டு சாப்பிட்டவர், நண்டுக்காலைக் கடிக்க முடியாமல், கூப்பிட்டார்!
டேய், தம்பி, அந்த ஐயாவின்ர, காலை ஒருக்கா உடைச்சு விடப்பு!
என்றவர், புறோக்கர் ஆறுமுகம், தூரத்தில் வருவதைக் கண்டு கொண்டார்!
'முருகா, முருகா! என்று மீண்டும் முருகனைக் கூப்பிட்டார்!
நான், நினைச்ச விசயம் சரிவந்திட்டுதெண்டால், உனக்குத் தங்கத்தால 'பாதம்' செய்து போடுவன், என்று மனதுக்குள், நேர்த்தியும் வைத்து விட்டார்!

௦௦௦௦௦௦௦                         ௦௦௦௦௦௦௦                    ௦௦௦௦௦௦0                      

வாங்க, ஆறுமுகத்தார்!
இண்டைக்கு நல்ல நாளாக் கிடக்கு! கன நாளா, நினைச்சு வைச்சிருக்கிற, ஒரு விசயத்தை, முடிச்சிடலாம் என நினைக்கிறன், எண்டவர் முருகனை, மீண்டும் பார்க்க, முருகனும் சிரித்த மாதிரி இருந்தது!
புறோக்கருக்கு, முதலே விசயம் விளங்கி விட்டது.
ஆனால், எதற்கும், கந்தையற்றை வாயால வரட்டுமே, என்று பொறுமை காத்தார். அதே நேரம், பக்கத்தில இருந்த, கண்ணாடியில பார்த்து, வெயிலில் கரைந்து போன சந்தனப் பொட்டைச் சரிப்படுத்தினார்.
நான், நேர விசயத்துக்கு வாறன், ஆறுமுகம்.
என்ர ஒரே  பெட்டை, வதனிக்கு, நீ ஒரு இடம் பாக்க வேணும்!
சரி, என்ன மாதிரி எண்டு சொல்லுங்க. நான் என்ர 'டேட்டா பேசில' பாத்துச் சொல்லுறன்.
அதெல்லாம், வேணாம் ஆறுமுகம். உனக்குப் பிரச்சனையில்லாம, நானே பாத்து வைச்சிட்டன். இவள், விசாலாட்சி இருக்கிறாளெல்லோ? அவளின்ர  பெடியன், நல்ல பெடியனாம். 'ஹட்டன் நேசனல் பாங்கில' உதவி மனேச்சராம்.
அதை ஒருக்காப் பாத்து முடிச்சு விடன்!
ஆறுமுகத்தார், ஒரு நிமிடம் பேசவில்லை!
இல்லப் பெடியனுக்குப் 'பத்தில வியாழன்' வாற நேரம் என்று, இழுத்தார்.
அதுக்கென்னடாப்பா,   படிச்ச பெடியன், வெளிநாடு, கீடு போகப் போறான்போல! நாடு கிடக்கிற நிலையில, அதுகும் நல்லதுக்கு தான், என்றவர், மீண்டும், முருகனைக் கூப்பிட்டார்.
இல்லை, அதுக்கில்லை... புறோக்கர் இழுத்தார்.
இஞ்சை பார், நான் நினைச்சுட்டன்! இதை முடிச்சுத் தந்தா, உனக்குப் பத்தாயிரம்!
சரி, சாதகத்தைத் தாங்கோ! என்று இரண்டு கையையும், நீட்டி வாங்கிக் கொண்டார், ஆறுமுகத்தார்!
இந்த முறை, முருகா, என்றது, கந்தையரில்லை, ஆறுமுகத்தார்!

அவரது, மனதில் ஒரு பெரிய திட்டம் உருவாகி விட்டது!
அவருக்கும், உள்ளூரக் கந்தையரில ஒரு பொறாமையும் உண்டு!
ஊரில, தாங்கள் வசதியாக இருக்கேக்கை, ஒன்றுமில்லாமல் கிடந்ததுகள் எல்லாம், இண்டைக்குக் கடையும், விலாசமும்!
தனக்குள், கறுவிக்கொண்டவர், நேர தனது, சாத்திரி நண்பனிட்டைப் போய், எனக்கு ஒரு சாதகம், எழுத வேணும்!
சாத்திரி, என்ன பகிடியா விடுகிற ஆறுமுகம்? எனக் கேட்க, ஆயிரம் ரூபாய்களைத் தூக்கி மேசையில் போட்டார், ஆறுமுகம்!
சரி... நல்லதுக்குத் தானே, என்ற படி, பணத்தை எடுத்துக் கொண்டார் சாத்திரியார்!
'அடுப்பில, அவிக்கேக்க, கவனமா அவிக்க வேணும், என்ற படி, 'முருகா' என்றவர், அன்றைக்குப் பின்னேரமே யாழ்ப்பாணத்துக்குப், பஸ் பிடித்தார்.


௦௦௦௦௦௦௦                         ௦௦௦௦௦௦௦                    ௦௦௦௦௦௦0                      


விடியக் காலமையே, யாழ்ப்பாணம் போனவர், நேரே விசாலாட்சி, வீட்டை தான் போனார்.
தனது, மூத்த மகளின்ர, பிள்ளையை, முழங்காலில் வைத்து, நல்லெண்ணை தடவிக் கொண்டிருந்த விசாலாட்சி, பிள்ளையைத் தடுக்கில குப்புறப் போட்டுவிட்டு, எழுந்தவள்,
நான் நினைச்சனான், காகம் கத்தேக்கையே, நீங்க தான் வருவீங்க எண்டு சொல்லிய படியே, அண்ணை என்ன மாதிரி? என்று கேட்டாள்!
'எல்லாம் பழம் தான். என்று சிரித்த படியே சொன்ன ஆறுமுகத்தார், தேத்தண்ணியைப் போடன், என்ற படி திண்ணையில் அமர்ந்தார்!
அப்ப அந்தச் செவ்வாய்ப்  பிரச்சனை?
அதெல்லாம் தொண்ணூறு வீதம் பொருத்தம் என்றவர், இனி இதைப் பற்றி மூச்சு விடக் கூடாது, என்று வாயில் விரலை, வைத்துக் காட்டினர்!
மீண்டும், முருகா! என்றொரு குரல்!
இந்த முறை, விசாலாட்சி!






குரு மூர்த்தி



நீண்ட காலங்கள் கடந்து போய்விட்டாலும், குருமூர்த்தியின், முகம் மட்டும் இன்னும் மனத்திரையை விட்டு அகன்ற பாடாயில்லை. இவ்வளவுக்கும் குருமூர்த்தி, ஒரு பிரபலமான மனிதனோ, அல்லது எம்மால் ஏற்றுக்கொள்ளப் பட்ட தேச வழமைகளின் படி, ஒரு சாதாரண மனிதனோ கூட அல்ல.
சுத்தமான, கலப்படமில்லாத தமிழில் சொன்னால், ஒரு விசரன்.
நடராசா அண்ணையின்ர, கன்ரீனுக்கு  முன்னால, இருந்த மரத்துக்குக் கீழ, இருந்த படி, ஒரு இருபது பக்க, அப்பியாசக் கொப்பியில், ஏதாவது எழுதியபடி இருப்பான். ஆனால், வாய் திறந்து ஒரு வார்த்தை பேசியதை, நாங்கள் ஒருவரும் கேட்டது, கிடையாது. ஒரு வேளை, ஊமையாக இருக்கலாம் போலும் என நாங்கள் நினைத்து, அவனை, நாங்கள் கரைச்சல் படுத்துவதும் கிடையாது!
அன்றைக்குச் சனிக்கிழமை!
விடியக் காலமையே, கே.எஸ்.எஸ், அவர் தான் எங்கட போர்டிங் மாஸ்டர், நடந்து வந்தது, கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் எங்களுக்கு இருந்தது!
ஏதாவது, பெரிய விசேசம் எண்டால் தான், அவர் அப்படி வருவதுண்டு. கையில். பிரம்பொண்டும், மறைந்தபடி இருந்தது!
எங்கடா, அந்த மூதேவி?
ஆரு, சேர்?
அவன் தான்ரா, அந்தக் கழுவாஞ்சிக் குடியான்!
விடுதியின் மேல் தட்டுக்கு, வேர்க்க, விறுவிறுக்க ஓடிப்போனால், ;கிங்க்ஸ்ரன்' என எம்மால், செல்லமாக விழிக்கப்படும், கழுவாஞ்சிக் குடியான், மூன்று தடித்த. காச்சட்டைகளைப் போட்டபடி, ஏற்கெனவே ஆயத்தமாக நின்றார்!
என்ன நடந்தது, கிங்க்ஸ்ரன்?
மச்சான், ராத்திரி ரீகலுக்குப் படம் பார்க்கப் போகேக்கை, இருட்டுக்குள்ள போய், ஒரு கதிரையில இருந்திட்டன். பக்கத்தில, ஒரு கிழடொண்டு இருந்து படம் பாத்தது! படத்தில, வந்த பகிடிக்குச் சிரிக்காம இருந்துது, மச்சான்!
நான், ஒரு பகிடி வாற நேரம், அதுகின்ர துடையில தட்டி,
அப்பு!  இது பகிடி, எண்டு சொல்லிப் போட்டன்!
பிறகு, இன்டர்வலுக்கு வெளிச்சம் வரேக்க பாத்தா, அது நம்மட சுப்பரடா!
அதற்கு மேல், எமக்கு மேலதிக விளக்கம் வேண்டியிருக்கவில்லை!
ஒரு மாதிரித் 'தேவாரம்' பாடித் தேத்தண்ணியும், குடிச்சிட்டு, கன்ரீனடிக்குப்   போனால், குருமூர்த்தி ஒரு காகிதத்தை நீட்டினான். அதில், இப்படியான, பகிரங்கத் தண்டனைகள், எதிர்மறையான விளைவுகளைத் தரும்' என எழுதியிருந்தது! அது தான், அவன் ஒரு விசரனல்ல, என என்னை நம்ப வைத்தது.
பின்பு, கணிதத்தில் வரும், இரு படிச்சமன்பாடுகள், சினை காணுதல், போன்றவற்றில் வரும் கடுமையான, கணக்குகளைக் கொடுத்தால், செய்து தருவான். அவனுக்குள், மறைந்திருந்த நகைச் சுவை, உணர்வும் சில எதிர் பாராத நேரங்களில், வெளிப்படுவதுண்டு.
ஒரு முறை, குருமூர்த்தி, சில சமன்பாடுகளைத் தந்து, 'பரவளைவு' கீறும்படி சொன்னான். நாங்களும், கீறிக் கொண்டு போய்க் காட்ட, ஒருவன் கீறிய 'பரவளைவைப்' பார்த்துக் குருமூர்த்தி, விழுந்து, விழுந்து சிரித்தான்! குருமூர்த்தியைச் சிரிக்கப் பண்ணியதைக் கண்டு, எங்களுக்கு மிகவும் சந்தோசம், எண்டாலும் கொஞ்சம் பயமும் பிடித்துக் கொண்டது!
பின்பு ஒரு பேப்பரில, 'கிழவியளின்ர மாதிரிக் கிடக்கு' என்று எழுதிக்காட்ட நாங்களும், சிரித்து வைத்தோம், ஆனால், அப்போது, அந்தப் பகிடி வடிவாக விளங்கியிருக்கவில்லை!  
நாட்கள் போக, குருமூர்த்தியும், எங்களுக்கு வேண்டப் பட்டவனாகி விட்டான்!
அட்சர கணிதத்திலிருந்து , ஆவர்த்தனப் பாகுபடு வரை, அவன் அறிந்திருந்தான்!
நாங்களும், நாளடைவில், நடராசா அண்ணையின்ர 'லைற் ரீ' வாங்கிக் குடுத்தால், வாங்கிக் கொள்வான்! அதுக்கு மேல, எங்கட அந்த நேரப் பொருளாதாரமும், இடம் கொடுக்காது!
சில வேளைகளில், மிஞ்சிய சாப்பாட்டை, 'பண்டா' கொண்டு வந்து கொடுத்தால் மட்டும், குருமூர்த்தி சாப்பிடுவான்.
'பண்டா' ஒரு சகல கலா வல்லவன். விடுதிச் சமையல், தொடக்கம், 'வாட்டர் பம்ப்' வேலை செய்யாவிட்டால், பைப்புக்குள் தண்ணீர் விட்டு, ஸ்டார்ட்' பண்ணுவது, மற்றும் காவல் வேலை, வரை செய்வான்! அவனுக்கும், குருமூர்த்திக்குமிடையே , ஒரு விதமான பிணைப்பு, எப்போதும் இருந்தது!
எங்களுக்கும், பண்டாவுக்கும் இடையில், ஒரு 'ரகசியமும்; இருந்தது!
விடுதியில், சாப்பாடு சரியில்லா விட்டால், ஒளிச்சு 'மொக்கங்கடை' போனால். பண்டா, ஒருவருக்கும் தெரியாமல், கேற்றைப் பூட்டாமல் விட்டிருப்பான். நாங்கள் திரும்பி வந்ததை, உறுதிப் படுத்தியபின், எனக்கு நித்திரை வாறான்' என்று கூறியபடி படுக்கப் போவான்.
ஒருநாள், பண்டாவின் நெருங்கிய உறவினர் ஆரோ, செத்துப் போய் விட்டதாகத் தகவல் வந்து, பண்டா போகவேண்டி வந்து விட்டது.
அவனிடம், பணம் இருக்கவில்லை. 'பண்டா' ஒரு நாளும், சேமித்து வைத்ததில்லை. எங்களிடமும், காசு அதிகமாக இருப்பதில்லை.
போர்டிங் மாஸ்டராலும்,     ஒரு 'ரிற்றேன் ரிக்கற் '    மட்டும் தான் குடுக்க முடிஞ்சுது.
அண்டைக்கு இரவு, பண்டா வழக்கம் போல, குருமூர்த்தியிடம், இரவுச் சாப்பாடு, கொண்டு போனான்.
'பண்டா, ஊருக்குப் போய் வாறது' எண்டு தனது தமிழில் குருமூர்த்தியிடம் சொன்னான்.
குருமூர்த்தியும், பண்டாவிடம், ஒரு என்வலப்பைக் கொடுத்து விட்டுச் சிரித்தான்.
அதனுள்ளே, முன்னூறு ரூபாய்' நோட்டுக்களாக இருந்தது.
அன்று தான், பண்டா, வாய்விட்டு அழுததை, முதன் முதலாகக் கண்டேன்!