Saturday 10 December 2011

பொய்மை வெல்கின்றது!

மாரீசன் என்ற மாயமானில்,
மதியிழந்த சீதா தேவியின்,
மயக்கம் போல,
இரவு பகலாகத்,
தினமும் பூக்கின்ற,,
இணையத் தளங்களின் பூக்களால்,
பாலும், நீரும்
கலந்த கிண்ணத்திளிருந்து,
பாலை மட்டும் பிரித்தெடுக்கும்,
வல்லமையில்லாத,
பாவப் பட்ட அன்னப் பறவையாய்,
உண்மையும் பொய்யும்,
ஒன்றுடன் ஒன்று,
குலவிக் கலவும் , உலகத்தில்,
உண்மையைத் தேடுகின்றேன்!

பொன்னும், மணியும்,
புன்னகைகளும் அணிந்து,
பொய்மை வலம் வருகின்றது.
மண்ணின் மைந்தர்கள்,
என்ற கவசம் பூட்டித்,
தென்றல் காற்றின் மென்மையோடு,
பொய்மை உலா வருகின்றது.
புனிதமேனும் பேழையில்.
பத்திரமாகப் பூட்டிவைத்துப்,
பீடத்தில் அமர்த்தித்,
தூவிய அர்ச்சனைப் பூக்களிலும்,
துளித் துளியாய்ச் சிந்திய,
துவர்ப்புக் கலந்த,
வேர்வைத் தடங்களிலும்,
பொய்மை கலந்து விட்டது.

தர்மத்தின் முக மூடியைப்,
போர்த்துக் கொண்டு,
சர்வ தேச அரங்குகளில்,
சந்தனக் காவியினால்,
நொந்து சிதைந்து போன,
எலும்புக் கூடுகளையும்,
கண்ணீரில் நிதம் நனையும்,,
தலையணைகளின் ஈரங்களையும்,
மூடி மறைக்கின்றது.
அமாவாசைக் காலத்தின்,
கும்மிருட்டை நோக்கி,.
நம்மை அழைத்துச் செல்கிறது,

பாம்பையும், கயிற்றையும்,
பிரித்தறிய இயலாத,
அத்துவிதப் பெருவெளியின்,
அனாதைகளாய்,
அரிதாரம் பூசிய பொய்மை,
அழைத்துச் செல்கின்றது.
அர்த்த ராத்திரியின்,
இருட்டின் மங்கல் வெளிச்சத்தில்,
அறிவென்ற விளக்கேந்தி,
அடையாளம் காண்போம்!
பொய்மைகளின் புகலிடத்தை,
வாய்மையால் அழித்திடுவோம்!
,






No comments:

Post a Comment