Friday 30 December 2011

புதுமையான, ஆண்டொன்று பிறக்கட்டும்!















புதுமைகள் ஏந்திய,
புதிய ஆண்டொன்று பிறக்கட்டும்!
பூக்கள் மலர்வது போல!
புதுமையாக!
பூக்கள் மரங்களில் இருக்கட்டும்,
பிடுங்கி எடுத்து
மாலைகளாக்க வேண்டாம்!

சர வெடிகள் இல்லாமல்,
சாதாரணமாக மலரட்டும்!
வெடிச்சத்தம் கேட்டாலே,
வேதனை கலந்த நினைவுகளே,
வெடித்துக் கிளம்புகின்றன!

புத்தம் புதுச் சேலைகளும்,
பட்டு வேட்டி சால்வைகளும்,
தொட்டுப் பார்க்க நேரமின்றித்,
தம் பாட்டில் தூங்குகின்றன!
சீர் கொடுத்த நகைகள் கூடச்,
சேரிடம் தெரியாது,
வருடக் கணக்காக,
வங்கிப் பெட்டிகளில்,
வருகின்ற தலைமுறை பார்த்து,
ஆறுதலாகத் தூங்குகையில்,
இன்னும் நகை எதற்கு?

கஷ்டமென்று வரும்போது,
கை கொடுக்க என்கிறோம்!
இதுவரை,
இல்லாத கஷ்டமா,
இனிவரப் போகின்றது?

போதையில் மறையாது,
புதிய ஆண்டு பிறக்கட்டும்!
சொந்த நினைவோடு
சிந்தனையில் நிலைக்கட்டும்!
பரிசுகள் இல்லாமல்,
புத்தாண்டு பிறக்கட்டும்,

தர்மம் எங்கள்,
தலை காக்க வேண்டாம்!
தனக்கென எதுவுமில்லாமல்,
தவிக்கின்ற உறவுகளின்,
தன் மானத்தைக் காக்கட்டும்!


1 comment:

  1. நல்ல மனதுள்ள ஒருவரின் நல்ல கவிதை :-)

    ReplyDelete